செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு : இந்திய ராணுவம் பதிலடி

Makkal Kural Official

ஸ்ரீநகர், ஏப். 26–

காஷ்மீர் எல்லைக்கோடுப் பகுதியின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22–ந்தேதி பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கர்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றது. பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாரானது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.இந்தியாவின் நடவடிக்கையை போருக்கான ஆயத்தம் என்று விமர்சித்த பாகிஸ்தான், சில அடாவடி அறிவிப்புகளையும் வெளியிட்டது. வாகா எல்லையை இரு நாடுகளும் மூடியது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே பங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் ஆதில் ஹுசைன் டோக்கர், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிப் ஷேக் ஆகிய இரு லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளில் நேற்று முன் தினம் இரவில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகர்க்கப்பட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம் என்று இந்தியா கூறியதைத் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இன்று அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு உதவிய

2 பேர் கைதுபஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் ஒவ்வொரு குற்றவாளியும் ஆதரவாளரும், அவர்களின் இருப்பிடத்தில் சென்று வேட்டையாட வேண்டும். நமது மக்களுக்கு எதிரான கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலுக்கு அவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-–இ–-தொய்பா அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *