செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை

Makkal Kural Official

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி

பூஞ்ச், ஏப். 28–

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் (4வது நாளாக) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்தது.

இதனிடையே, எல்லை தாண்டியதாக இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4வது நாளாக நள்ளிரவில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடததியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இருப்பினும் இதில் யாருக்கும் பாதிப்பபு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-–பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல்கள் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *