சென்னை, ஜன.17–
அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி மலை அணிவித்து வணங்கினார்.
அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா தி.மு.க. கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
108 கிலோ
கேக் வெட்டினார்
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 108 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு சேலை வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் இவற்றிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து, தலைமைக் கழக வளாகம் எதிரில், எடப்பாடி பழனிசாமி, கழக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான ஆதிராஜாராம் ஏற்பாட்டின்பேரில் அன்னதானம் மற்றும் மகளிருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் படப்பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன.
சென்னை தலைமைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, என்.தளவாய் சுந்தரம், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் பி.சத்தியா, விருகை ரவி, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். ராஜஷ், எம்.கே.அசோக், பா.பென்ஜமின், கே.பி.கந்தன் மற்றும் வாலாஜாபாத் கணேசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன், அமைப்பு செயலாளர் ஒய்.ஜவஹர்அலி, சிங்கை ராமச்சந்திரன், ராஜ் சத்யன், நிர்மலா பெரியசாமி, வேளாங்கண்ணி, ஒன்றிய செயலாளரும், ஜெயலலிதா பேரவை துணை செயலாளருமான பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் சந்தான கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், நேதாஜி கணேசன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், வட்ட செயலாளர் கே.துளசி, ஆயிரம் விளக்கு பகுதி கழக துணை செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், வி.எஸ்.வேல் ஆதித்தன், பி.சின்னையன், தி.நகர் கோ.சாமிநாதன், ராணி அண்ணாநகர் தி.கோவிந்தன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் 108-–வது பிறந்த நாளையொட்டி, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு, தொண்டர்கள் கழகக் கொடிகளை தங்கள் கைகளில் எந்திய வண்ணம், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லி எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.