புதுடெல்லி, டிச.9–
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25–ல் தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக மத்திய அரசு திட்டமிட்டதாக சொல்லப்பட்டது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரம் குறித்து பரவலாக பேசத் தொடங்கினர். கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கிய நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இரு அவைகளும் தொடங்கின.
இதற்கிடையே, காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். மேலும், ஹங்கேரி – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடைய நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.