கோபி, பிப். 14–
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் பெயரை, பொதுக் கூட்டத்தில் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதற்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அந்த விழாவில் வைக்காததால் கலந்துகொள்ளவில்லை என்றும், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் தாம் என்றும், தன்னை யாரும் சோதிக்க வேண்டாம் என்றும் அடுத்தடுத்த பேச்சுகளில் தெரிவித்தொருந்தார்.
பெயரை சொல்லாதது ஏன்?
மேலும் செங்கோட்டையன் உரையாற்றிய கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாதது மீண்டும் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, அத்தாணியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், “இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் துரோகிகள் தான். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இந்த பேச்சுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, கடந்த 2 நாட்களாக நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-யின் பெயரை பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்விக்கு, ”அதற்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் என்று பேசினேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் வீடியோவில் துரோகிகள் என்று கூறியதற்கு அவரே மற்ற தொலைக்காட்சிகளில் விரிவாக பதில் அளித்துள்ளார். அதைப் பற்றி நான் பேச அவசியம் இல்லை எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.