ஊட்டி, மார்ச் 27–
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் பழங்குடி வாலிபர் ஒருவர் பலியானார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி கவர்னர் சோலை பகுதியில் சிறுத்தை மற்றும் புலி ஆகிய வன விலங்குகள், குடியிருப்பு பகுதியில் சுற்றுவதாக நீண்ட நாட்களாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு வசித்த கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டனின் பாதி உடல் மீட்கப்பட்டது. அவர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வனத்துறையினர், போலீஸ், வருவாய்த்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். படுகாயம் அடைந்த நிலையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. வன விலங்குகள் நடமாட்டம் பற்றி பல முறை புகார் தெரிவித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் ஆவேசமாக புகார் தெரிவித்தனர். வனத்துறையினரை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.