சென்னை, ஜூலை 13–
செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக்கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரெயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுக்குறித்து நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:–
நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும் என கூறியுள்ளார்.
![]()





