பட்டம் வென்றது மகிழ்ச்சி, பெருமை என பேட்டி
சென்னை, டிச. 16–
சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று தமிழக வீரரான குகேஷ் சாதனை படைத்தார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் 22 வயதில் இந்த பட்டத்தை வென்று கரீ காஸ்பரோவின் நீண்ட நாள் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார்.
மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த டி. குகேஷை முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி. குகேஷ் மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை திரும்பினார். குகேஷூக்கு தமிழக அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
பட்டம் வென்றது
மகிழ்ச்சி, பெருமை
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு குகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி, பெருமை. டிங் லிரென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது என்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து குகேஷ் வீட்டிற்கு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு இன்னோவா காரில் செஸ் சாம்பியன் குகேஷ் படத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் “The New King in.. The Kingdom of Chess” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
சென்னை கலைவாணர் அங்கத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.