செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்

தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி

சென்னை, செப். 16–

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி கூறினார்.

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே கிரிக்கெட் உலகக் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 50 ஓவர் உலகக் கோப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை சேப்பாக்கம் மைதானம், உலகக் கோப்பை தொடருக்காக சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புதிய பெவிலியன் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஐ.பி.எல். தொடரின் போதே, இந்த பெவிலியனை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். மழை இல்லையெனில், சிறப்பான கிரிக்கெட்டை இந்த முறை ரசிக்க முடியும்.

சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர். சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு எப்போதும் போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானம் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லாதது வருத்தமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *