டெல்லி, ஜூலை 30–
தேனி தொகுதி வெற்றி செல்லாது என்கிற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும் தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மேல்முறையீடு மனு
இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அண்மையில் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கைக்கு ஏற்ப உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீர்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ரவீந்திரநாத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.