செய்திகள்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை

Makkal Kural Official

ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

லக்னோ, மே.12-

ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய ஏவுகணை தொழிற்சாலையை உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது லக்னோ, கான்பூர், அலிகர், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய 6 முக்கிய முனைகளைக் கொண்டுள்ளது.

லக்னோவில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும். மேலும் அங்கு இலகுவான, அடுத்த தலைமுறை ஏவுகணைகளும் தயாரிக்கப்படும். இது, நாட்டின் தரை, வான் மற்றும் கடல் வழியாக சென்று துல்லிய தாக்குதல் திறன்களை அதிகரிக்கும்.

இந்த மையத்தின் சிறப்பம்சங்கள்:

பிரம்மோஸ் ஏவுகணை பகலிலும், இரவிலும் விண்ணில் ஏவக்கூடியது. நிலம், நீர், வான்வெளியில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் அடுத்த தலைமுறை தயாரிப்பு மையமாக, உ.பி.யின் இந்த மையம் விளங்கும்

நம் ராணுவத்தின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு மற்றும் ரஷ்யாவின் என்.எப்.ஒ., மெஷினோஸ்ரோயெனியா நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையமாகவும், நம் ராணுவத்தின் துல்லிய தாக்குதலுக்கான அடுத்த தலைமுறை ஏவுகணை கருவி களை சோதித்து பார்க்கும் மையமாகவும் இந்த இடம் திகழும்

இப்போது, ஆண்டுக்கு 80 – 100 ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்ட இந்த மையம், வருங்காலத்தில் 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக உயர்த்தப் படும்

இங்கு தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணை எடை குறைவானதாகும். தற்போதைய, 2,900 கிலோ எடையில் இருந்து 1,290 கிலோ குறைந்த எடையில் இங்கு ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, ‘சுகோய்’ போன்ற போர் விமானங்களில் அவற்றை எளிதாக பொருத்தி, போர் முனைக்கு 3 ஏவுகணையை சுமந்து செல்ல முடியும். லக்னோ மையத்தில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மணிக்கு, 3,430 கி.மீ., வேகத்தில் பறக்கக் கூடியவை.

உத்தர பிரதேச அரசு வழங்கிய இடத்தில், 300 கோடி ரூபாய் செலவில், இதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது.

தமிழகத்தை அடுத்து, உ.பி.யில் தான் ராணுவ தளவாடங்களுக்கான பிரத்யேக தயாரிப்பு வளாகம் உள்ளது.

உ.பி. அரசின் ராணுவ தொழில் கேந்திரமாக விளங்கும் இந்த மையத்திற்கு கான்பூர், அலிகார், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் துணை அமைப்புகள் உள்ளன. இந்த மையத்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பார்வையிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *