வாடிகன், ஏப். 21–
கத்தோலிக்க திருச்சபையின் உச்ச அமைப்பின் 266 வது போப்பாண்டவராக போப் பிரான்சிஸ் 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகெங்கிலும் உள்ள 130 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவராக 12 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி உள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வந்த முதல் போப்பாண்டவராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவிற்கு வெளியே பிறந்த முதல் போப் ஆண்டவராகவும் வரலாற்றில் இடம் பிடித்தார் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், எளிமையான வாழ்க்கை முறையையும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான ஆதரவையும் வலியுறுத்தியவர். அவரது மறைவு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிகனில் இறுதிச் சடங்குகள்
மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் நேற்று வீடு திரும்பிய நிலையில், பக்தர்களுக்கு ஆசிய வழங்கினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 7.35 மணிக்கு உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது. வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போப் பிரான்சிசின் இறுதிச் சடங்குகள் வாடிகன் நகரில் நடைபெறும் என வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகளாவிய தலைவர்களால் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.