ஒன்றிய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்
டெல்லி, ஏப். 9–
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, தனது தரப்பைக் கேட்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது. இதை அடுத்து, வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
கேவியட் மனுத் தாக்கல்
இதற்கிடையே, வக்பு திருத்தச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், தனது தரப்பு கருத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.