டெல்லி, டிச. 4–
உச்சநீதிமன்ற வரலாற்றில் 3 வது முறையாக பெண் நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்தார். இந்த 3 பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு அமைக்கப்படுவது மூன்றாவது முறையாகும்.
இந்த நீதிபதிகள் அமர்வு முன்னர், திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கு முன், 2013 மற்றும் 2018ல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அந்த அமர்வில் இருந்தனர்.
பெண் தலைமை நீதிபதி
2018 இல், நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வில் உறுப்பினர்களாக இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அவர்களுள், 2027 இல், நீதிபதி பி.வி. நாகரத்னா ‘நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி’ என்ற பெருமையை அடைவார்.