வாஷிங்டன், மார்ச் 21–
ரஷ்ய போரை முன்னிட்டு உக்ரைனுக்கு ஆதரவாக 2,900 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்புகிறது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிபர் பிடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.2,900 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது.
இந்த ராணுவ தொகுப்பு அடங்கிய உதவியின்படி ஏவுகணைகள், பீரங்கிகள், பீரங்கி ஒழிப்பு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற சாதனங்களை அமெரிக்கா வழங்கும்.
உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்து கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளன என்பதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து கொள்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, ரஷ்யா மட்டுமே தனியாக போரை இன்றே முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதனை ரஷ்யா செய்யும்வரை, எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.