சினிமா செய்திகள்

ஈழத்து வலியில் கிட்டுவின் ‘சல்லியர்கள்’ சினிமா: உயிரோட்ட நடிப்பில் காமெடி கருணாஸ், ‘ரீல்ஸ்’ சத்யாதேவி!

Makkal Kural Official

‘இன்ஸ்டாகிராமில்’ ரீல்ஸ் போட்ட சத்யா தேவி, சமூக ஊடகத்திலிருந்து வெள்ளித்திரைக்குள் ஊடுருவி இருக்கிறார். படம்:“சல்லியர்கள்”. அறிமுகம். புது முகமா… சத்தியம் பண்ணினாலும் நம்பவே மறுப்பார்கள்.

நின்றால்… நடந்தால்… ஆண் டாக்டரின் கேள்விக்கு பதில் தந்தால் … சட்டென்று திரும்பிப் பார்க்கும் அந்தப் பார்வையில்- புகுந்து நம் இதயத்தில் உறைகிறார். (இதயத்தை கனமாக்கும் கதையில், உறக்கத்தை கெடுக்கிறார் என்னமாய் நடிப்பு…?!)

சல்லியர்கள்: ஈழ வரலாற்றில் தைரியம் இரக்கம், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த போராளி மருத்துவர்கள். அவர்களுக்கு வீர வணக்கத்துடன் நடிகர் கருணாஸ் தயாரித்து மௌன அஞ்சலி செலுத்தி இருக்கும் சினிமா தான் இப்படம். வெளியீடு சுரேஷ் காமாட்சி, (வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ்.)

சத்யா தேவி( பெண் டாக்டர்), மகேந்திரன் (ஆண் டாக்டர்), கருணாஸ்- பிரதான பாத்திரங்கள். மற்றவை ஓரளவுக்கு பரிச்சயமான முகங்கள்.

இசை- கென் (கருணாஸின் மகன்), ஈஸ்வர். ஆடைகள் பூங்குழலி கிட்டு (இயக்குனரின் மனைவி), ஸ்டண்ட் -சரவெடி சரவணன்.

சிங்கள ராணுவத்துக்கு எதிரான போரில் காயமடைந்து உயிருக்கு போராடும் போராளிகளை பங்கர்- முதலுதவி சிகிச்சை மையமாக இயங்கும் தற்காலிக மருத்துவமனையில் இருந்து காப்பாற்ற போராடும் போராளிகளை சுற்றி நகரும் திரைக்கதை. (இதுவரையில் திரையில் சொல்லப்படாத கதை)

கருணாஸ் காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடக்கலாம் உணர்வுகளில் ஒட்டிய நடிப்பில் , உயிரோட்டமான ஒரு படைப்பில்.

30 அடிக்கு30 அடியில் பங்கர் பதுங்குகுழியை உருவாக்கிய கலை இயக்குனர் முஜிபுர் ரகுமான், குண்டு மழைக்கு நித்தம் நித்தம் பயந்து ஜீவ மரணம் போராட்டம் நடத்தும் யுத்த பூமியின் பதட்டத்தை கண்ணில் கொண்டு வந்த நிறுத்திய கேமராக்காரர் சிபி சதாசிவம் இருவரும்- மறக்க முடியாதவர்கள்.

நந்தினியின் ஃப்ளாஷ் பேக் விழி ஓரம் கண்ணீர் வரும். வலிகளை ஒற்றியெடுக்கும் வரிகளில் வைரமுத்து.

சின்னப் படம், இதெல்லாம் எங்கே ஓடும் என்று… திரை அரங்குகளை ஒதுக்கும் மேலிடம் வெளிப்படுத்திய ஆத்திர மூட்டும் பேச்சின் எதிரொலி, “போர்க் குணம்” காட்டும் கிட்டு+காமாட்சி சுரேஷ் இருவரின் கோபாவேசத்தில் சல்லியர்கள் இப்போது ஓடிடியில் அடைக்கலம்.

யுத்தத்தில் சிதைந்த வசிப்பிடம், எதிரிகளால் சித்திரவதை, தினம் தினம் செத்துப் பிழைக்கும் மக்களின் வலி, சல்லியர்களின் தியாக வாழ்க்கை: கிட்டு (இயக்குனர்) பேச வைக்கிறார். இலக்கிய – வரலாற்றில் ஆய்வறிஞன் கிட்டு என்பது படைப்பில் பளிச்…பளிச்…! ஈழத்து வலி நெஞ்சு பொறுக்குதில்லையே…?!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *