சென்னை, ஜன. 4–
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14–ந்தேதி காலமானார்.இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.