மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
மார்ச் 2–ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை, பிப்.28-
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமுகமாக நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அண்ணா தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497, மூன்றாம் பாலினம் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள், 310 விவிபேட் யந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு யந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இந்தத் தேர்தலில் காலையிலிருந்தே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டது.
இதன்படி காலை 9 மணிக்கு 10.10 சதவீதம், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதமும், மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இரவு 9.45 மணி வரை
வாக்குப்பதிவு
ராஜாஜிபுரம் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 153-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னர் வந்த வாக்காளர்களில் சுமார் 300 பேர் வாக்களிக்காமல் வரிசையில் காத்திருந்தனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 9.45 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. பின்னர் மின்னணு யந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மற்ற 237 வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு முன்பே வாக்குப் பதிவு யந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு யந்திரங்களை அனுப்பி வைத்தனர்.
சுமார் இரவு 8 மணி முதல் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு யந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கின.
இறுதியாக வாக்குப்பதிவு முடிவடைந்த ராஜாஜிபுரம் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு யந்திரங்கள் மட்டும் சுமார் 11.30 மணிக்கு மேல் மையத்தை வந்தடைந்தன. வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு யந்திரங்கள் அனைத்தும் சென்றடைந்ததும் அறைகளில் வைக்கப்பட்டன. கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், பொதுப் பார்வையாளர் ராஜகுமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு யந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு யந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் தனி குழுவினர் கண்காணிக்கிறார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 400க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 130 முதல் 140 பேர் வீதம் மொத்தம் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுதவிர 2 தீயணைப்பு வாகனங்களும், ஈரோடு, பவானி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற யாருக்கும் அங்கு அனுமதி இல்லை.
இறுதி வாக்குப்பதிவு விவரம்
இரவு வரை வாக்குப் பதிவு நீடித்த வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகளோடு, டோக்கன் வழங்கப்பட்ட வாக்காளர்களையும் கணக்கில் எடுத்து வாக்குப் பதிவு விவரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு சதவீதம் 74.79 என தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் அந்தத் தொகுதியில் 66.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. மார்ச் 2–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
இந்நிலையில் இன்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதே போல் வேட்பாளர்களின் பிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை:
ஏற்பாடுகள் தயார்
வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 16 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். ஒரு அறையில் 10 மேஜைகளிலும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஒரு மேஜையில் வாக்கு எண்ணும் பணியில் 2 அலுவலர்களும் அதை மேற்பார்வையிடும் பணியில் ஒரு நுண் பார்வையாளரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மொத்தம் 32 அலுவலர்கள், 16 நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்தார்.
ஓட்டுகள் எண்ணப்பட்டு நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரமும், பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.