செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியில்லை

Makkal Kural Official

சென்னை, ஜன.10-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போவதில்லை, யாருக்கும் ஆதரவும் தர போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அண்ணா தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை பனையூரில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது புஸ்சி ஆனந்த், ‘தலைவர் விஜய் கட்சியை தொடங்கும்போதே தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டார். நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான். இடைப்பட்ட காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிட போவதில்லை. மேலும் எந்த கட்சிக்கும் நம்முடைய ஆதரவு கிடையாது. நமது இலக்கு பெரிது. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் என்பதை மனதில் வைத்து கட்சி பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *