வாஷிங்டன், ஜன. 11:
ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா
தயாராக உள்ளது” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 வாரங்களாக நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டம் இன்றும் நீடிக்கிறது. அவர்களை ஒடுக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகவும் பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஈரானில் நடக்கும் விசயங்கள் வெளியுலகிற்கு சரிவர தெரியாத வகையில் நிலைமை உள்ளது. சில அரசு ஊடங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி, வெளிநாட்டில் வசித்து வரும் அந்நாட்டு இளவரசர் ரெசா
பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.
உதவ தயார்: டிரம்ப்
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இதற்கு முன் காணாத வகையில், சுதந்திரம் வேண்டும் என தேடி ஈரானில் மக்கள் அலைகினிறனர். அதற்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் நிற்கிறது என தெரிவித்து உள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, ஈரானை கவனித்து வருகிறோம். அவர்கள் மக்களை சரிவர நடத்தவில்லை என தெரிகிறது. அதனாலேயே அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். நீங்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது. மீறினால், ஈரான் மக்களை காக்க அரசுக்கு எதிராக நாங்களும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருக்கும் என கூறினார்.
இந்நிலையில், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு ஆதரவாக ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ராணுவம் தொடர்பில்லாத இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப்பிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க வெளியுவு துறை மந்திரி மார்கோ ரூபியோ கூறும்போது, ஈரானின் துணிச்சல் மிகுந்த மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது என கூறினார்.
இதனை வரவேற்கிறேன் என கூறிய குடியரசு கட்சியின் செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், இது ஒபாமா நிர்வாகம் அல்ல. ஈரானுக்கு எதிராக போராடும் அந்நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு எதிரான கொடூர தாக்குதல் முறியடிக்கப்படும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் என கூறினார்.
![]()





