சென்னை, பிப்.1–
இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் தி.மு.க. என்றென்றும் துணை நிற்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில், `தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு’ ‘ஓமிட்”–களின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில், இக்கூட்டமைப்பின் சார்பில், 12 இஸ்லாமிய கல்வி அறிஞர்கள் உட்பட 13 ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-–
1974–இல் தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பில் இன்றைக்கு கிட்டத்தட்ட 520 கல்வி நிறுவனங்கள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
கற்பவனாக இரு அல்லது கற்பிப்பவனாக இரு அல்லது கற்பிப்பவர்களுக்கு உதவி செய்பவனாக இரு. இந்த மூன்றையும் தவிர நான்காவது நபராக கண்டிப்பாக இருந்து விடாதே என்பதுதான் நபிகள் நாயகம் சொன்ன வார்த்தை. ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறருக்கும் கல்வி கற்றுக் கொடுப்பதே தான தர்மங்களில் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.
எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்று நபிகள் சொன்னார். அதைத்தான் தி.மு.க.வும் தொடர்ந்து இந்த மண்ணிலே சொல்லி வருகிறது, செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் கல்விக்கு கிடைத்த மாபெரும் கொடையாகத் திகழும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு களங்கம் ஏற்படுத்த பாசிச கூட்டம் அவதூறுகளையும், வதந்திகளையும் தொடர்ந்து பரப்பி வருகிறது. இதுபோன்ற சவால்களை எல்லாம் எதிர்கொண்டுதான் இப்போதும் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பாக கல்வி சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இப்போது மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசே பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற ஒரு வரைவை யு.ஜி.சி. மூலம் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்த யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார். அதுமட்டுமல்ல, வக்பு வாரிய திருத்த மசோதாவையும் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
பாராளுமன்ற கூட்டுக்குழுவில் நம் கழகக் கூட்டணி எம்.பி.க்கள் இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதனால் கிட்டத்தட்ட 10 எம்.பி.க்களை என்ன, ஏது என்று கேட்காமலே பா.ஜ.க ஒன்றிய அரசு தற்காலிக இடை நீக்கமும் செய்து இருக்கிறது. ஆனாலும், முதலமைச்சர் இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற, அந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிறார். ஏனென்றால், கழகத்தின் வரலாறு அப்படி.
இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்கும், உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் கழகம் என்றைக்கும் துணை நிற்கும். அயராது பாடுபடும். சிறுபான்மை மக்கள் நீங்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சிகளை சென்னை பெருமாநகராட்சிமாமன்ற உறுப்பினர் பாத்திமா முசாபர் தொகுத்து வழங்கினார்.
அமைச்சர் கோவி.செழியன், வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆசிம், பொதுச் செயலாளர் அகமத் மீரான், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், மியாசி அமைப்பின் தலைவர் இம்தியாஸ் பாஷா, செயலாளர் இலியாஸ் சேக், ஆற்காடு நவாப் அப்துல் அலி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.