முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை
சென்னை, செப்.20-–
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி, மேலாண்மைக் குழு தலைவர் ஷம்கல்லுஹா ரஹ்பானி, தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர் பெருளாதார மேம்பாட்டு கழகத் தலைவர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முஜிபூர் ரகுமான் அளித்த பேட்டி வருமாறு:-
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தி.மு.க. குரல் கொடுத்தற்காக நன்றி தெரிவித்தோம். 44 சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட திருத்தம் மூலம், வக்பு சொத்து ஆக்கிரமிப்பாளர்களை உரிமை யாளர்களாக மாற்றவும், இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பறிக்கவும் மத்திய அரசு திட்டமிடுகிறது. கருத்துக் கேட்பின்போது, 2.50 கோடிக்கும் அதிகமானோர், அந்த மசோதாவை எதிர்த்து கருத்து கூறியுள்ளனர்.
தற்போது கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்தும் சூழல் வந்தால், புறக்கணிக்காமல் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு தற்போது 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இட ஒதுக்கீட்டின் அளவு குறைவாக உள்ளது. எனவே இதை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
தமிழகத்தில் 10 சதவீத மக்கள் தினமும் மது அருந்துவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.