சென்னை, மார்ச்.25-
இஸ்லாமியர்களுக்கு காவல் அரணாக தி.மு.க. எப்போதும் இருக்கும். பாரதீய ஜனதாவின் சதித்திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவரும், தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான துறைமுகம் காஜா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
திருவாரூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில்தான் அண்ணாவும், கருணாநிதியும் முதன்முதலில் சந்தித்து கொண்டார்கள். கருணாநிதி முதல்முறை ஆட்சிக்கு வந்ததும் மிலாது நபிக்கு அரசு விடுமுறை விட்டார்.
ஆனால் அதை அண்ணா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பழையபடி மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கருணாநிதி சேர்த்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார். வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க முதன் முறையாக மானியம் வழங்கினார். காயிதே மில்லத் பெயரில் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். இப்படி கருணாநிதி செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
கருணாநிதியின் வழித்தடத்தில்தான் திராவிட மாடல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. சிறுபான்மையினரின் கல்வி, சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளோம்.
தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடியே 50 லட்சம் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி, இஸ்லாமிய சமூக, பொருளாதார, வாழ்வியல் சூழலை மேம்படுத்தக்கூடிய அரசாக தி.மு.க அரசு செயல்படுகிறது.
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம், இஸ்லாமியர்களை காக்க கூடிய அரணாக தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் மதரீதியிலான வன்முறைகள் ஏற்படாமல், காத்து வரும் அரசாக தி.மு.க. அரசு எப்போதும் இருந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அதற்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்தி, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டீர்கள். இப்போது, எடப்பாடி பழனிசாமி எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர்கள் கூட்டத்துக்கு சென்று கலந்துகொள்கிறார்.
தற்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்துடன் பாரதீய ஜனதா இதை கொண்டு வர பார்க்கிறது. அதற்கும் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
ஒருவேளை அது சட்டமானால் அதை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். பாரதீய ஜனதாவின் சதித்திட்டங்கள் நிறைவேற தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம். உங்களுக்கு எப்போதும் துணையாக நாங்கள் இருப்போம்.
இஸ்லாமிய மக்களுக்கான மேம்பாட்டு நலத்திட்டங்களை அரசின் மூலம் தொடர்ந்து நிறைவேற்றுவோம். அதேநேரத்தில், இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக விளங்கும் இயக்கமாக தி.மு.க. என்றும் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாசர், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், நவாஸ் கனி, மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜோ அருண், தமிழ்நாடு அரசின் காஜிக்கள் முகமது மெஹ்திகான், முகமது அக்பர் அலிஷா ஆமிரி, ரேலா ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் முகமது ரேலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் நன்றி கூறினார்.