ஜெருசலேம், டிச. 30–
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடல் நலப் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால், தற்காலிக பிரதமர் பொறுப்பு ஏற்றுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில், நெதன்யாகுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நெதன்யாகுவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சைக்காக பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெனின் தற்காலிக பிரதமராக பணியாற்றுவார்” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து, ‘பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் சில நாட்களில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார். தற்போது பிரதமர் நெதன்யாகு உடல்நிலை நல்ல நிலையில் இருக்கிறது’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.