மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன.13-–
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதற்கு வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 12-ந்தேதி அன்று, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது 2 மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால், மீனவ சமுதாயத்தினர் இடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்ய, உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.