சென்னை, டிச. 3–
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 18 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.