கொழும்பு, ஏப்.5-
இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அதிபர் அனுரா குமார திசநாயகா உற்சாக வரவேற்பு அளித்தார். இன்று இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கைக்குப் புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் 6 மூத்த அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அரசு சார்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மோடியை அதிபர் அநுர குமார திசநாயக வரவேற்றார். இதனையடுத்து கொழும்பு நகரில் அனுரா குமார திசநாயகாவுடன் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
முதல்முறையாக
ராணுவ ஒப்பந்தம்
பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா–இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.
இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையுடனான ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதைத்தவிர எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பிரதமர் மோடியின் பயணம் உதவும் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களையும் பிரதமர் சந்தித்து பேசுகிறார்.
சோலார் திட்டம்
அடிக்கல்
இந்தியா உதவியுடன் இலங்கையில் நடந்துள்ள பல்வேறு திட்டங்களை மோடியும், இலங்கை அதிபரும் இணைந்து தொடங்க வைக்கிறார்கள். மேலும் சோலார் திட்டம் ஒன்றுக்கும் இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரு தலைவர்களும் அனுராதபுரம் சென்று மகாபோதி கோவிலில் வழிபாடு செய்கின்றனர். அங்கும் இந்தியா உதவியில் நடந்த பணிகளை இருவரும் தொடங்கி வைக்க உள்ளனர்.
மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கை செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அவர் இலங்கை சென்றிருந்தார்.
பாம்பனில்
ரெயில் பால விழா
இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலையில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ராமேசுவரம் 11 மீனவர்கள்
நிபந்தனையின்றி விடுவிப்பு
பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி விடுவித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதி 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 11 மீனவர்களின் வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள், கோர்ட்டில் மீனவர்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.அதன் அடிப்படையில் ஊர்க்காவல்துறை கோர்ட் நீதிபதி நளினி சுபாஸ்கரன் வழக்கை விசாரித்தார். அப்போது ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவித்து உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட இந்த மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படை