செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ 9.60 கோடி கஞ்சா பறிமுதல்

Makkal Kural Official

யாழ்ப்பாணம், ஏப். 30–

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர்.

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கை பருத்தித்துறை கடற்கரைக்கு கஞ்சா கடத்தி வர இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இலங்கை காங்கேசன்துறை, பருத்திதுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கடற்பரப்பில் வழக்கத்தை விட இலங்கை கடற்படையினர் தீவிர சோதனை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடற்பரப்பிலிருந்து இன்று அதிகாலை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித் துறை கடற்கரையை நோக்கி வந்த 2 பைபர் படகை கடற்படையினர் பிடித்தனர்.

சோதனை செய்த போது அதில் சுமார் 320 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களுடன் படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 4 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இலங்கையர்கள் 4 பேரும் இரண்டு பைபர் படகுகளில் தமிழக கடற்கரைக்கு வந்து இந்த கஞ்சா பொட்டலங்களை பெற்று கொண்டு வந்தது தெரிய வந்தது.

கஞ்சா ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் என மொத்தமாக ரூ.9.60 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் பைபர் படகு, கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரும் பருத்தித்துறை போலீஸிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *