சாரதா அரசாங்க பணியில் பொதுப் பணித்துறையில் சேர கடிதம் வர, தனது ஊருக்குப் பக்கத்திலேயே உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் வாங்கினார். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் சற்று இணக்கமாக சென்று வேலைகளைக் கற்றுக் கொண்டார்.
நிறைய மக்கள் வந்து செல்லும் அலுவலகம் ஆனதால் எப்போதும் அலுவலகம் கலகலப்பாக இருந்தது. தனது பணியில் நேர்மையுடன் பணி புரிந்தார் சாரதா.
வேலைக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்த வேளையில் சாரதா அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு , என்ன வைத்தியம் பார்த்தும் அவர் உடல் ஆரோக்கியம் மேன்மையடையாமல் ஒரு நாள் அவர் எல்லோரையும் விட்டுச் சென்றார்.
சாரதா சிறிது கலக்கமடைந்தாலும் தன்னை தானே தேற்றிக் கொண்டு மற்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அலுவலகம் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது அம்மாவுடன் தங்கினார். நாளாக நாளாக சாரதா அம்மாவிற்கு மகளின் எதிர் காலம் குறித்து கவலை வாட்டி வைத்தது.
அன்று வந்த சாரதாவின் சித்தப்பா, சாரதா அம்மாவிடம் திருச்சியில் ஒரு பையன் உள்ளார். பெயர் கண்ணன். பொதுத்துறை நிறுவனத்தில் பணி புரிகிறார். சொந்த வீட்டில் இருக்கிறார்.அப்பா கிடையாது. அம்மா மற்றும் ஒரே தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் என்றார்.
சாரதா உன் அபிப்பிராயம் தெரிந்தால் மேற்கொண்டு தொடரலாம் என்றார்.
நான் கிளம்புகிறேன் என்ற அவரிடம் அவள் அம்மா சாப்பிடாமல் செல்லக் கூடாது என்று சொல்லி அவரை சாப்பிட வைத்து சில பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து, நான் அவளிடம் பேசிவிட்டு கூறுவதாகக் கூறினார்., அவர் தங்களின் உபசாரத்தில் நான் நெகிழ்ந்தேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
அலுவலகத்தில் இருந்து வந்த சாரதாவிடம் அவர் சித்தப்பா வந்து சொன்ன செய்தியைக் கூறினாள் அம்மா.
சாரதா என்ன உனக்கு நானிருப்பது தொந்தரவாக உள்ளதா என்றார்.
மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் சாரதா அம்மா அங்கிருந்து நகர்ந்தார்.
இரவு உணவு அருந்தியதும் சாரதா வேறென்ன சொன்னார் சித்தப்பா என்றதும் சாரதா அம்மா அவர் சொன்ன எல்லாவற்றையும் கூறினாள்.
நான் சித்தப்பாவிடம் பேசுகிறேன் என்றார்.
மறு நாள் அலுவலகத்திலிருந்து சித்தப்பாவைத் தொடர்பு கொண்டு பேசினார் சாரதா. அவர் உனது விருப்பத்திற்கேற்றபடி தான் செய்ய முடியும் என்றார்.
அதையே தான் விரும்புவதாக சாரதா சொன்னாள்.
அடுத்த சில நாட்களில் சாரதா திருமண ஏற்பாடுகள் நடந்தன. சாரதா சித்தப்பா கல்யாண வேலைகளில் பரபரப்பானார். திருமண நாள் நெருங்க நெருங்க சாரதா உட்பட வீட்டில் அனைவரும் பரபரப்பாகவே இருந்தார்கள். நல்லபடியாக சாரதா கண்ணன் திருமணம் முடிந்ததும் சாரதா அம்மா நிம்மதியடைந்தார்.
சாரதா தனது வேலையைத் திருச்சி பக்கம் மாற்றிக் கொள்ளவில்லை. விடுமுறை நாட்களில் கணவனை வரச் சொல்லி விடுவார். எப்போதாவது ஒரு முறை தான் கணவர் வீட்டிற்குச் சென்று மாமியாரைப் பார்த்து விட்டு வருவார்.
விடுமுறையில் வந்த கண்ணன் சாரதாவிடம் தங்கைக்கு ஒரு நல்ல வரன் வந்துள்ளது என்றார். சாரதா எதுவும் பேசாமல் இருந்தார்.
பையன் சென்னையில் ஒரு கம்பெனியில் பணி புரிகிறார் என்றார். சிறிது நேரம் கழித்து சாரதா மெல்ல தனது கணவரிடம் பணம் மற்றும் எல்லாம் தயாராகவே உள்ளது தானே என்றாள்.
நகைகள் மற்றும் சீர்வரிசை சாமான்கள் தயாராக உள்ளது. கல்யாணச் செலவு மட்டும் ஏற்பாடு செய்யணும். கண்ணன் நானும் எல்லாவிதமான கடன்களையும் வாங்கி விட்டேன் என்றார். சாரதா உங்களுக்குத் தான் நண்பர்கள் அதிகமாச்சே, அவர்கள் உதவாமலா போயிடுவார்கள் என்றாள்.
நன்றாக நடத்த நான் ஏற்பாடுகள் செய்து தானே ஆக வேண்டும் என்றார் கண்ணன்.
கண்ணன், சாரதா பேச்சிலிருந்து அவரிடம் பணம் கேட்பது வீண் என்று நினைத்தார். பெண் பார்க்கும் படலம் மற்றும் நிச்சயத்தார்த்தத்திற்கு கட்டாயம் வரணும் என்றார் கண்ணன்.
எனது அம்மா வரலாமில்லையா என்று சாரதா சொன்னதும்
தாராளமாக என்று கூறி விட்டு கண்ணன் புறப்பட்டார். மனதிற்குள் பணம் ஏற்பாடு பற்றிய சிந்தனை ஓடியது. வீட்டிற்கு வந்த கண்ணன் அம்மாவிடம் சாரதா கூறியது எதையும் கூறாமல் அம்மாவுடன் உன் மருமகள் வருவார் என்றார்.
பெண் பார்க்கும் படலம் முடிந்து வந்தவர்கள் எங்களுக்கு பெண்ணைப் பிடித்துள்ளது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதியை குறித்தால் நல்லது என்றார்கள். கண்ணன் நான் நல்ல நாள் பார்த்து சேதி சொல்லுகிறேன் என்றார்.
சீக்கிரம் வைத்தால் நல்லது. ஒரு கடமை முடிந்து விடும் என்றார். மேலும் திருமணத்திற்கு நீங்கள் கல்யாண மண்டபம் தேட வேண்டாம் என்றார் பையனின் அப்பா. நாங்கள் எங்கள் பையனுக்கு வரன் குதிர்ந்தால் திருவெள்ளறை ஆலயத்தில் பண்ணுவதாய் வேண்டியுள்ளோம். நாங்களே கோவிலில் ஏற்பாடு செய்கிறோம். சாப்பாடு மட்டும் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். சாப்பிட இடமெல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றார் பையனின் அப்பா.
அப்போது அங்கு வந்த சாரதா உங்கள் விருப்பப்படியே செய்யலாம் என்றார்.
கண்ணன் எதுவும் தோன்றாமல் அமர்ந்திருந்தார். பையனின் அப்பா கண்ணனிடம் உங்கள் பெண்ணுக்கு சம்மதமா எனக் கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.
கண்ணன் அம்மாவைப் பார்க்க சம்மதம் என்ற சிக்னல் வந்தது. பிறகு பையனின் அப்பா நீங்கள் எங்கள் பையன் அதாவது உங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு ஒரு கார் வாங்கித் தாருங்கள். திருமண மண்டபச் செலவு தான்இல்லையே என்றார்.
கண்ணன் சரியெனக் கூற, வாகனம் விவரம் அனுப்புகிறோம் என்றார் பையனின் அப்பா.
கண்ணன் உணவு அருந்தி விட்டுத் தான் செல்ல வேண்டுமெனக் கூற எல்லலோரும் சரியென்றார்கள். அவர்கள் சென்றதும் கண்ணன் சாரதாவைப் பார்த்து சின்ன மீனைப் போட்டு பெரிய மீன் பிடிக்கின்றார்கள் என்றார்.
சாரதா இதோடு விட்டார்களே என்றார்.
சாரதா மாமியாரிடம் என்னால் நீங்கள் எதிர்பார்த்தபடி பணம் தர முடியாது. கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள்.
கண்ணன் வேணாம்; நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
கண்ணன் திருமணத்தை பையன் வீட்டில் எதிர்பார்த்தபடி செய்து வைத்தார். அவர்கள் சென்றதும் கண்ணனிடம் சாரதா எப்படி இவ்வளவு பணம் செலவழித்தீர்கள் எனக் கேட்க கண்ணன் மௌனம் சாதித்தார். கண்ணன் அம்மா அவன் வேலையை விட்டு விட்டு வந்த பணத்தில் தான் செய்தார் என்றாள்.
எப்படி நீங்கள் என்னிடம் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு வந்தீர்கள் என்றாள் சாரதா.
கண்ணன்‘‘ இந்த வீட்டிற்கு நீ மருமகளாக வந்துள்ளாய். உனக்கும் எல்லாவற்றிலும் பங்கு உண்டு என்றான்.
சாரதா நீங்கள் என்னைக் கலக்காமல் பணியை விட்டது மிகவும் தப்பு என்றாள்.
கண்ணன் நான் பணத்திற்கு எங்கே செல்வேன். எனக்கு வேற வழி தெரியவில்லை. அதனால் இப்படி செய்தேன். நீ பணம் தந்து உதவுவாய் என நினைத்தேன். நீ பரிகாசமாக உங்கள் வீட்டில் பேசினாய் என்றார் கண்ணன். இதெல்லாம் ஒரு பேச்சா என்று சாரதா கூற கண்ணன் எனக்கு எப்படி வாழ்வதென்று தெரியும் என்றார்.
நீங்கள் உன் மனைவியாகிய எனக்கு சொல்லித் தான் செய்திருக்கணும் என்றார்.
இப்படி பல பேச்சுக்கள் பேச பேச அது முற்றிச் சண்டையாகப் போனதால் சாரதா தனது அம்மாவுடன் கிளம்பினாள்.
போகும் போது இனிமேல் இங்கு வர மாட்டேன் என்றாள் சாரதா.
சரி சரி போ. நானும் அங்கு வர மாட்டேன் என்றான் கண்ணன்.
இரு அம்மாக்களும் ஏதும் சொல்லாததால் பிளவு சாத்தியமாகி பிரிந்தார்கள் இருவரும்.
கண்ணன் வேறு வேலை தேடிக் கொண்டார்.
காலங்கள் ஓடின.
தனது அம்மா இறந்ததை தெரிவித்தும் சாரதா வராததைக் கண்டு கண்ணன் வருந்தினான்.
அதே போன்று சாரதா அம்மா இறந்த செய்தி கேட்டு அங்கு சென்ற கண்ணன் மூன்றாவது மனிதர் போல் நின்று விட்டு வந்தார். சாரதா துளியும் கண்டு கொள்ளவில்லை.
சாரதா மேன்மேலும் பதவி உயர்வில் பல ஊர்கள் சென்று விட்டு பணி ஓய்வானதும் தனது ஊருக்கு வந்தார். சுத்தமாக கண்ணனை மறந்த நிலையில் இருந்தார்.
வீட்டில் வேலை செய்ய ஆட்கள் போட்டு மகா ராணி மாதிரி வாழ்ந்து வந்தார் சாரதா. கடைக்கு கூட வருவதற்கு ஒரு பெண், சமைக்க ஒரு பெண், பணிவிடை செய்ய ஒரு பெண் என பலர் இவர் வீட்டில் வலம் வந்தார்கள்.
சாரதாவிற்குத் தெரியாமல் சில வேளைகளில் பணத்தை களவாடினார்கள்.
சாரதா சற்று உடல் ஆரோக்கியம் குறைந்ததும் பணிப் பெண்களுக்கு பணம் தந்து வேலையில் இருந்து நிறுத்தினார்.
தனக்குப் பிறகு தான் சேர்த்து வைத்துள்ள பணம் தனது கணவருக்குச் செல்லுமே என்ற எண்ணம் உதயமாகியது.
வேறு வழியின்றி தான் இது வரை சுமங்கலியாக இருந்து அனுபவித்ததற்காக என் கணவருக்கே என் பணம் செல்லட்டும் என்று எண்ணினார்.
தனது சொந்தம் என்று சொல்லும் சித்தப்பாவின் மகன் நரேனை அழைத்தாள். அவனுக்கு பணம் மற்றும் சில நகைகள்தந்து விட்டு தான் இறந்தால் காரியம் செய் என்று சொல்லி விட்டு, தனது கணவருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டுமென சொன்னார்.
மறு நாள் காலை உடல் நிலை மோசமானது சாரதாவிற்கு. அப்போதும் நரேனிடம் என் காலத்துக்கு அப்புறம் என் கணவருக்கு மீதமுள்ள என் பணத்தை சொத்தை கொடுத்துவிடு என்று கூறினாள்.
நரேன் இதெல்லாம் நினைக்காதீர்கள் என்றான் நரேன். சற்று நேரத்தில் வந்த மூச்சுத் திணறல் காரணமாக சாரதா இறந்தாள்.
நரேன் கண்ணனைத் தொடர்பு கொண்டு செய்தியை சொல்ல முனைகையில்
எதிர் திசையில் கண்ணனின் தங்கை அண்ணா இன்று காலையில் இறந்து விட்டார் என்றாள்.
இறுதியில் ஒரே நாளில் மரணத்தில் இணைந்த அவர்கள் ஆதர்சன தம்பதிகள் என்று நினைத்தான் நரேன்.
சாரதாவின் எண்ணப்படி அவள் பணத்தை அவள் கணவர் அனுபவிக்க முடியாமல் போனதே என்று வருந்திய நரேன் அந்த வருத்தத்திலிருந்து மீள வெகு நேரம் பிடித்தது..
#சிறுகதை