செய்திகள்

இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 12–

தேசிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டின் கல்வி முறையை சிதைக்க வேண்டாம், இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.

ஒரு கோடி மாணவர்களில் 15 லட்சம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே… தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படிக்கின்றனர். 3-வது மொழியை படிக்க அவசியம் இருந்தால், ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது எங்களின் ஆணி வேரோடு ஒன்றாக கலந்ததும் கூட. தமிழ்நாட்டின் கல்விமுறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. சிறப்பாக உள்ள தமிழ்நாட்டின் கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் திறமையானவர்கள். நமது பெருமைக்கு தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதை.

மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய 3-ம் மொழி தேவையில்லை. இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக உள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது தவறான வழிநடத்துதலாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு பாடத்திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. உடைந்ததை ஒட்ட வைக்க நினைக்காதீர்கள்; நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இது மொழி பற்றியது மட்டுமல்ல – முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழ்நாடு சமரசம் செய்யாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

––––––––

நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மற்றும் பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினார். இதற்கு சமூகவலைதள பதிவில் பதில் அளித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியிருப்பதாவது:- தவறான தகவல்களை பரப்புவது உண்மைகளை மாற்றி விடாது. தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாடலை குறைத்து மதிப்பிடுகிறது.

தமிழக அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் என எதுவும் இல்லை. கடந்த 15.3.2024 அன்று தமிழக அரசு எழுதிய கடிதம் தேசிய கல்வி கொள்கையை அங்கீகரிப்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே தமிழ்நாடு, மத்திய அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக எந்தவொரு மத்திய அரசின் திட்டத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை.

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் ஆய்வுகள் மற்றும் பரிந்துரை அடிப்படையில் அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்றும் அந்த கடிதத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. தேசிய கல்வி கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் மரபை சிதைக்க முயற்சிப்பவர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *