செய்திகள்

இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி

Makkal Kural Official

புதுடெல்லி, ஏப்.22–

2 நாள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார்.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார். அப்போது சவுதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இன்று சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.

3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்வது இது முதல் முறை. முன்னதாக 2016 மற்றும் 2019ல் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். சமூக– கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் நீண்ட கால நட்பு நாடுகளான இந்தியாவும் சவுதி அரேபியாவும் அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்த பயணம் உதவும். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் வலை தளப்பதிவில், ‘சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு புறப்பட்டு விட்டேன். அங்கு பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறேன்.

சவுதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2வது கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை எதிர்நோக்கி உள்ளேன். அதுமட்டுமில்லாமல், இந்தியர்களின் மத்தியில் உரையாற்ற இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *