பெங்களூரு, ஜன. 26–
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் கே.எம்.செரியன் (வயது 82) காலமானார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இருதயத்தை எடுத்து, அதனை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார்.
சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய சாதனையாளர். நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்றவர். மருத்துவத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி டாக்டர் கே.எம்.செரியனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ‘ப்ராண்டியர் லைப்லைன் மருத்துவமனையை’ நிறுவி மருத்துவ சேவை வழங்கி வந்த டாக்டர் கே.எம்.செரியன் மருத்துவத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்தவர்.
அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாக அமைந்துவிட்டது; பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#Makkalkural #Dr.Cherian #Heart Transplant #Cardiologist #Livenews #livenews #Tamil News