சென்னை, மார்ச் 8–
இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் நிலையங்களை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக அணுகும் வகையில் வசதிகளை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2வது கட்ட பணிகளில் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடிய வகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.
இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ரூ.13.50 லட்சம் (ஜிஎஸ்டி தவிர்த்து) மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் உஷேஷ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் உஷேஷ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் பிராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.