24-–ந் தேதி ஆஜராக வேண்டும்
புதுடெல்லி, டிச.16-–
இரட்டை இலை வழக்கு தொடர்பாக 2 பேருக்கு 24-–ந் தேதி ஆஜராகுமாறு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி இருக்கிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், அண்ணா தி.மு.க. உட்கட்சி விவகார வழக்கு முடிவுக்கு வரும்வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4–-ந் தேதி வந்தபோது, இரட்டை இலை சின்ன விவகாரத்தில் 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் தேர்தல் கமிஷன் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரையும் வருகிற 19-ந் தேதிக்குள் இந்திய தேர்தல் கமிஷனில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறும், 23-ந் தேதி நேரில் ஆஜராகுமாறும் கேட்டிருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய பி.ராம்குமார் ஆதித்தன் மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்கள் மேற்படி தேதியில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவும், நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தாலும் 2 பேரும் தனிப்பட்ட விசாரணையையும் கோரி இருந்தனர். இதனால் அவர்களை வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.