சிம்லா, ஆக. 16–
இமாச்சால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்து அடித்துச் செல்லப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இமாச்சால பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர்(என்டிஆா்எஃப்), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (எஸ்டிஆா்எஃப்), ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடித்துபோகும் அடுக்குமாடிகள்
இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள சம்மர் ஹில் பகுதியில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்த தகவலை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் விரைவாக தொடங்கியது. மேலும் மோப்ப நாய்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்து சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இமாச்சால பிரதேசத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஆகஸ்ட் 14 ந்தேதி வரை மொத்தம் ரூ.7,171 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 9,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.