செய்திகள்

இன்னொரு மொழிப்போரை சந்திக்கத் தயார்: ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, பிப்.19-–

தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அத்துடன் மும்மொழி கொள்கையை ஏற்கவும் மாட்டோம், இன்னொரு மொழிப்போரை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டுப் போராட்டத்தில் தலைவர்கள் அறிவித்தனர்.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய மந்திரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ‘மோடி அரசே தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?’ என்ற தலைப்பில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னை பாரிமுனையில் உள்ள மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் அருகே நேற்று அந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடே கொந்தளிக்கிறது

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தின் நிறை வாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-– இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் தீட்டவில்லை. தற்போது இந்தியை ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறைக்கு வர வேண்டிய ரூ.2 ஆயிரத்து 190 கோடியை உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்துள்ளது. அதோடு ஒருபடி மேலே போய், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான அந்த கல்வி நிதியை தரமுடியும் என்று வெளிப்படையாக மத்திய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். நாங்கள் பிச்சையோ, கடனோ கேட்கவில்லை. இப்படி கேட்டால்தான் அவர்கள் (மத்திய அரசு) காதில் விழும். தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர் கட்டிய வரிப்பணத்தைத்தான், எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு வர வேண்டிய நிதி உரிமையைத்தான் உரிமையோடு கேட்கிறோம்.

தமிழ்நாடு அரசையும், மக்களையும் மிரட்டி ஒரு போதும் பணிய வைக்க முடியாது. தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்டங்கள் எல்லாம் கல்வி, இந்தி திணிப்புக்கு எதிராக நடந்ததுதான்.

எங்களுக்கு அரசியல் எல்லாம் 2-வது தான். எங்களுக்கு மொழி, இன உணர்வுதான் முதலாவது. மொழிப் போர் தியாகிகள் தாளமுத்துவும், நடராஜனும் அரசியலுக்காக உயிரை விடவில்லை. தமிழ் மொழியை காக்க உயிரைவிட்டவர்கள். சின்னசாமி அரசியலுக்காக சாகவில்லை. இந்தி திணிப்பை எதிர்த்து தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு இறந்தார். தமிழ்நாடு அரசு என்றைக்கும் மும்மொழி கொள்கையை ஏற்காது. இந்தியை திணிக்காதீர்கள்.

எங்களுக்கானதை கொடுக்காமல் மிரட்டிக்கொண்டு இருந்தால், எங்களுக்கு அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதும் தெரியும். அந்த நிலைமைக்கு தள்ளிவிட்டு விடாதீர்கள். நாங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். அதனால்தான் உரிமைக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கிறோம். நமது குரல் மத்திய பா.ஜ.க அரசின் காதில் விழ வேண்டும். நமது உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லை யென்றால், தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. அ.தி.மு.க.வினர் இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதையும், அவதூறு பரப்புவதையும் கைவிட்டு, தயவு செய்து எங்களோடு இணைந்து குரல் கொடுங்கள் என்றார்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், எங்களுக்கு பதவி மேல் துண்டு. கொள்கை எங்களுக்கு வேட்டி. அதை மறந்துவிடாதீர்கள். அதனை உணர்ந்த காரணத்தினால்தான் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மும்மொழியை ஏன் எதிர்க்கிறீர்கள். இது பண்பாட்டு படையெடுப்பு. அரசியல் சட்டத்தில் இருக்கும் உரிமையைத்தான் கேட்கிறோம் என்றார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், 100 ஆண்டு கால போராட்ட வரலாறுதான் இந்தி எதிர்ப்பு வரலாறு. இந்த மண்ணில் இந்திக்கு இடமில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கும், தமிழுக்கும் மட்டும்தான் இடம் என்று கருணாநிதி சொல்லிவிட்டு போய் இருக்கிறார். ஆனால் இதை மாற்றுவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. அதற்கு எச்சரிக்கை மணி அடிப்பதற்குத்தான் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட முடிவுதான் உங்களுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன்

வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகையில், மீண்டும் ஒரு மொழிப்போரை சந்திக்க நேரிடும் எச்சரிக்கும் அறப்போர் தொடங்கியுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு எந்த முயற்சி எடுத்தாலும், தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. வேரூன்ற முடியாது. பெரியாருக்கு எதிரான அரசியலை பேசினாலும், இந்த மண்ணில் உங்கள் அரசியல் எடுபடாது. இந்தியை திணிக்கலாம் என்று கனவு காணாதீர்கள். உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பேசினார்.

இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் உரையாற்றினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *