செய்திகள் முழு தகவல்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Makkal Kural Official

புதுடெல்லி, மே7

இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

“இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட முறையிலுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தவொரு பாகிஸ்தான் ராணுவ கட்டிடங்களும் குறிவைக்கப்படவில்லை. நாங்கள் விரிவான ஆய்வுகளின் பின்னர் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டோம்,” என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவா நேரடி கண்காணிப்பில் இயக்கியதாகவும், மூன்று ராணுவப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன் சேர்ந்து திட்டமிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வான்படை, கடற்படை, நிலப்படை ஆகியவற்றின் காமிகாஜி ட்ரோன்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்கள் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும், இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கண்காணித்து வருவதாக , தாக்குதலுக்குப் பின் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா அமைதியை விரும்புகிறதே தவிர, நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும்  பாதிக்கும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதைக் காட்டும் முக்கிய கட்டமாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *