செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் 15-ம் தேதி காலை வரை மூடப்படும்

Makkal Kural Official

புதுடெல்லி, மே 10–

இந்தியா –பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் 15–ந்தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களை அடையுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள 32 விமான நிலையங்களின் விவரம் வருமாறு:-

அடம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, கங்க்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நலியா, பதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சரசாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லை

இந்த விமான நிலையங்களில் அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்படுகிறது.

விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

ஏர் இந்தியா

இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், சண்டிகர், புஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்கள் 15–ந்தேதி காலை 5.29 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் பயணிக்க டிக்கெட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, மறு திட்டமிடல் கட்டணத்தில் ஒரு முறை தள்ளுபடி அல்லது ரத்துகளுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு, எங்கள் தொடர்பு மையத்தை 011–69329333 / 011–69329999 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

இண்டிகோ

இண்டிகோ நிறுவனம் ஒரு பயண அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தரம்சாலா, பிகானேர், ராஜ்கோட், ஜோத்பூர் மற்றும் கிஷன்கர் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் மே 15–ந்தேதிவரை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்

தற்போதைய சூழ்நிலை காரணமாக, லே, ஸ்ரீநகர், ஜம்மு, தரம்சாலா, காண்ட்லா, அமிர்தசரஸ் மற்றும் போர்பந்தர் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்கள் மே 15–ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

மறு முன்பதிவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெற, எங்கள் 24/7 உதவி எண்களான +91 (0)124 4983410 / +91 (0)124 7101600 ஐத் தொடர்பு கொள்ளவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *