ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சென்னை, பிப் 21–
‘‘சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு துறை அரசு கூடுதல் செயலாளர் கா. மணிவாசன் தலைமையில், சுற்றுலா ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களிடம் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை பொழுதுபோக்கு சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து விதமான சுற்றுலாக்களிலும் தமிழ்நாட்டில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறைந்த செலவில் அதிநவீன, தரமான, சிறப்பான மருத்துவத்தை அளித்து வருவதால் மருத்துவச் சுற்றுலாவில் இந்தியாவில் முதலாவது மாநிலமாக திகழ்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
நீர்சறுக்கு,
அலைச்சறுக்கு
தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள். இவை தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் உணவின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் சமையல் கலையில் நிபுணரான டாக்டர் பட்டம் பெற்ற தாமோதரனின் அறிவுரைகளின் படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல்களில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களுக்கும் காணொளி காட்சி வாயிலாக சமையல் கலையில் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பான வகையில் உணவு வழங்குதல், பரிமாறுதல் மற்றும் சுகாதார மேம்படுத்தல், போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் ச.கவிதா, சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.