டெல்லி, ஜன. 28–
இந்திய அரசின் இணைய பக்கத்தில் தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டிருந்த எழுத்துப்பிழையானது தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 74 வது சுதந்திரம் தினம் கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் எகிப்து அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் நடைபெற்ற முப்படை அணிவகுப்பை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கரா ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் பங்கேற்றன.
திருத்தப்பட்ட எழுத்துப்பிழை
இந்நிலையில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்திய அரசின் இணைய பக்கத்தில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் பெயரானது எழுத்துபிழையுடன் காணப்பட்டது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு திருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கேரள மாநிலத்தின் பெயரும் ஆங்கிலத்தில் கேரிலா என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. தற்போது கேரள மாநிலத்தின் பெயரும் திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.