செய்திகள்

இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

Makkal Kural Official

பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்

புதுடெல்லி, ஏப்.21-

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். துணை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இரவு விருந்து அளிக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு அறிவித்த பிறகு, அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோர் 4 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக இன்று காலை வந்தனர். புதுடெல்லி விமான நிலையத்தில் அவர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து துணை அதிபர் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் மேற்கத்திய உடையே அணிந்திருந்தனர். ஆனால் அவர்களின் மகள் மற்றும் இரு மகன்களும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். கோவிலில் வழிபாடு செய்தபோது அனைவரும் பூ மாலை அணிந்திருந்தனர். இதனையடுத்து பாரம்பரிய இந்திய கைவினை பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்துக்கும் சென்று அங்கு பார்வையிட்டனர்.

பின்னர் ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் தங்குகின்றனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச இருக்கிறார்.

பிரதமருடன் சந்திப்பு

இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் செல்கிறார்கள். அவர்களை பிரதமர் வரவேற்கிறார்.

அதைத்தொடர்ந்து அங்கு பிரதமர் மோடி–ஜே.டி.வான்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செய்து கொள்வது பற்றி முடிவு எடுக்கிறார்கள். வர்த்தகம், வரிவிதிப்பு, பிராந்திய பாதுகாப்பு ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என தெரிகிறது.

பேச்சுவார்த்தையின் போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய்மோகன் குவாத்ரா ஆகியோரும் மோடி தலைமையிலான இந்திய குழுவில் பங்கேற்கிறார்கள்.

இதனை தொடர்ந்து, ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்று இரவு ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு வான்ஸ் குடும்பத்தினர் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ராம்பாஹ் பேலசில் தங்குகின்றனர். நாளை (22-ந் தேதி) அவர்கள் ‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரிய தல பட்டியலில் இடம் பெற்றுள்ள அமீர் கோட்டையை பார்வையிடுகின்றனர்.

ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நாளை மாலை இந்திய குழுவினருடன் ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்தியா–அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

23-ந் தேதி காலை வான்ஸ் தனது குடும்பத்துடன் ஆக்ரா சென்று, தாஜ்மகாலை பார்வையிடுகிறார். இந்திய கலைப்பொருட்கள் இடம் பெற்றுள்ள ‘ஷில்ப்கிராம்’ என்ற திறந்தவெளி கண்காட்சி நிலையத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் வான்ஸ் குடும்பத்தினர் ஜெய்ப்பூருக்கு திரும்புகிறார்கள். மறுநாள் (24ந் தேதி) ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.

ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *