திருவனந்தபுரம், மே.10-
வைகாசி மாத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 19-ந் தேதி சபரிமலைக்கு வர இருப்பதாக கேரள உள்துறைக்கு கடந்த 6-ந் தேதி தகவல் வந்தது. அவர் பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வந்தது.
ஜனாதிபதியின் வருகையையொட்டி சபரிமலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தியா – – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் சபரிமலை வருகை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் வைகாசி மாத பூஜையையொட்டி வருகிற 18, 19-ந் தேதிகளில் சபரிமலையில் தரிசனத்திற்கு தடையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.