பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
வாஷிங்டன், மே 2–
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், ‘பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு அளிப்போம் ‘ என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு, டிரம்ப் நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
நேற்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் செயலாளர் பேசினார். கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கூறியது போல், பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுடன் வலுவாக நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.