செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

Makkal Kural Official

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், மே 8–

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.

31 பேர் பலி

இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினரின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், பாகிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 46 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் மேலும் 5 பேர் உயிரிழந்தாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் பேரில் இந்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்ததாகவும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மீதான இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *