செய்திகள்

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் கைது

அகர்தலா, பிப். 6–

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையும் பெற்று சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்த்தில் இருந்து நேற்று முன் தினம் இந்தியாவுக்குள் 12 பேர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். திரிபுராவின் சிபஜிஜாலா மாவட்டம் சொனமுரா எல்லையில் உள்ள கம்பி வேலியை துண்டித்து வங்கதேசத்தில் இருந்து 6 ஆண்கள், 6 பெண்கள் (குழந்தை உள்பட) என மொத்தம் 12 பேர் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். இதில் 4 பேர் வங்கதேசத்தினர், 8 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் ஆகும்.

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 12 பேரும் நேற்று திரிபுராவின் அகர்தலா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மேற்குவங்கத்திற்கு செல்லும் கஞ்சஜுங்கா ரெயிலில் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அப்போது, ரெயில் நிலையத்தில் அந்த 12 பேரும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்துள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 12 பேரையும் கைது செய்தனர். மேலும், ஐதராபாத்தை சேர்ந்த நபர் இந்த 12 பேரும் இந்தியாவுக்குள் நுழைய ஏற்பாடுகளை செய்தார் என்பது உறுதியானதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் உதவியுடன் இந்த 12 பேரையும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்ததையும், திரிபுராவில் இருந்து மேற்குவங்கத்திற்கு சென்று அங்கிருந்து இந்த 12 பேரும் ஐதராபாத் வர திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் ஐதராபாத்தில் இருந்து இந்த 12 பேரும் மத்திய கிழக்கு நாட்டிற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *