அகர்தலா, ஏப். 20–
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரிபுராவில் அரசு ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் உளவு துறை இணைந்து அகர்தலா ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேச நாட்டின் டாக்கா மற்றும் சிட்டகாங்கை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
அவர்கள் 3 பேரும் இந்தியாவுக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததும், கொல்கத்தா வழியே ரெயிலில் பயணித்து தென்னிந்திய மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களுடைய நடவடிக்கை சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. இதனால், ஆட்கடத்தல் அல்லது சட்டவிரோத புலம்பெயர் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள், டாக்காவை சேர்ந்த கம்ரூன் நெஸ்சா (வயது 23), ஆண்களான, சிட்டகாங்கை சேர்ந்த முகமது இஸ்மாயில் உசைன் (வயது 22) மற்றும் முகமது நூர் உசைன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தீவிர விசாரணையில், பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என போலீசார் கூறினர்.