டெல்லி, ஜூலை 26–
இந்தியாவில் புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,95,391 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு இல்லை
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1469 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா கண்டறியப்படாத நிலையில் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. மேலும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவுக்கு புதிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,31,915 ஆகவே தொடருகிறது.
இதுவரை மொத்தம் 4,44,62,008 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.