டெல்லி, மார்ச் 9–
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,177 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவில் கடந்த 4 வாரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சிறுக சிறுக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் 326 ஆக இருந்த பாதிப்பு சற்று உயர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் 379 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3,177 ஆக உள்ளது. புதிதாக ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக 5,30,776 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,89,072 ஆக உள்ளது.
தேசிய அளவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 சதவிகிதமாக இருக்கிறது. நேற்று 2,349பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 220 கோடியே 64 லட்சத்து 34,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.