டெல்லி, ஏப். 21–
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் ஒன்றிய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12,491 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 11,692 ஆக சற்று குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286 லிருந்து 66,170 ஆக உயர்ந்துள்ளது.
28 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் 10 பேரும், உத்தரபிரதேசத்தல் 4 பேரும், மகாராஷ்டிரா, டெல்லி, அரியானாவில் தலா 3 பேரும், சத்தீஸ்கர், பீகாரில் தலா 2 பேர், ராஜஸ்தானல் ஒருவர் என மொத்தம் 28 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 5,31,230 லிருந்து 5,31,258 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,48,57,992 லிருந்து 4,42,72,256 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,31,979 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,647 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.