துருக்கி பாதிப்பை கணித்த ஆய்வாளர் தகவல்
ஆம்ஸ்டர்டாம், பிப். 8–
துருக்கி, சிரியாவைத் தொடர்ந்து இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நெதர்லாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் திங்கள் அன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலியானோர் எண்ணிக்கை 8000- ஐ கடந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
8 மாநிலங்களில் வாய்ப்பு
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளில் வேறு எந்த நாடுகளின் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்ற ஆராய்ச்சிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் என 8 மாநிலங்களில் உள்ள பகுதிகள் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதாகவும் அப்பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் கூறியுள்ளது.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை 3 நாட்கள் முன்பு, 3 ந்தேதியே கணித்து டுவிட்டரில் வெளியிட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ், தற்போது இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயத்தினை பகிர்ந்துள்ளார். அதில், பெரும் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.